கோல்கத்தா: பாஜக பேரணியில் பங்கேற்கச் சென்ற கட்சித் தொண்டர்களை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியதை அடுத்து மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நேற்று பிரம்மாண்டப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தலைநகர் கோல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் ரயில், பேருந்துகள் மூலம் கோல்கத்தாவுக்குச் செல்ல முயன்றனர்.
இந்நிலையில், பாஜகவினரை அடையாளம் கண்டு காவல்துறையினர் அவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்துவதாக தகவல் பரவியது. இதனால் ராணிகஞ்ச், போல்பூர், துர்காபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நுழைய பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ரயில் நிலையத்துக்கு வெளியே பாஜக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து, பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
ரயில் மூலம் பாஜக தொண்டர்கள் கோல்கத்தாவில் குவிந்ததை காவல்துறையினர் தடுத்ததாகவும் அதன் காரணமாக வேறு வழிகளைப் பயன்படுத்தி அக்கட்சித் தொண்டர்கள் கோல்கத்தாவுக்கு வந்து சேர்ந்ததாகவும் பாஜக மூத்த தலைவர் அபிஜித் தத்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சில இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர்.
பேரணி வெற்றி பெறுவதைத் தடுப்பதற்காக காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொண்டதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.
மாநில ஆளுநரைக் கொண்டு, தமது தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார்.
தமது கட்சியின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்து, மத்திய புலனாய்வு, விசாரணை அமைப்புகள் பொய் வழக்குகளைக் கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க பாஜக மேற்குறிப்பிட்ட பேரணியை நடத்தியது.


