அகமதாபாத்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஓர் ஓட்டுநர் தாம் முதல்வரின் தீவிர ரசிகர் என்றும் அவர் தன் வீட்டிற்கு உணவருந்த வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட கெஜ்ரிவால், நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள ஓட்டுநரின் வீட்டுக்குச் சென்று அவருடன் உணவருந்தினார். அவரது ஆம் ஆத்மி கட்சியினர் சிலரும் உணவருந்தினர்.
முன்னதாக, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர் வீட்டுக்கு முதல்வர் கெஜ்ரிவால் செல்லக்கூடாது என அகமதாபாத் காவல்துறை தடுத்து நிறுத்தியது.
ஆனால், தலைவர்கள் மக்களுடன் கலந்திருக்க வேண்டும் என்றும் குஜராத்தில் அத்தகைய நிலை இல்லை என்றும் கெஜ்ரிவால் சாடினார். மக்கள் நலனே முக்கியம் என்றும் கூறினார்.
திணிக்கப்படும் பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறிய பிறகே, காவல்துறை அனுமதி அளித்தது.

