இந்தியா - பூட்டான் எல்லை திறப்பு
கோக்ரஜார்: கொரோனா தொற்று காரணமாக இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையேயான எல்லை நுழைவாயில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அந்தப் பாதையை வரும் 23ஆம் தேதி திறப்பதற்கு இருநாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள், வர்த்தகம் மற்றும் அதிகாரபூர்வ பயணங்கள் உள்ளிட்டவற்றுக்காக எல்லை திறக்கப்படுவதாக பூட்டான் அரசு அறிவித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்: டிரோன்கள்
வாங்குகிறது விமானப்படை
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூன் மாதம் இரண்டு டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான விமானப்படைத் தளத்துக்குள் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது விமானப்படைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், விமானத் தளங்கள் மீதான டிரோன் தாக்குதல்களை முறியடிக்க, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய டிரோன்களை அதிகளவு வாங்க இந்திய விமானப்படை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்படியாகும் விலையில்
உயிர்காக்கும் மருந்துகள்
புதுடெல்லி: கடுமையான நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளியவர்கள் எளிதில் மருந்துகளை வாங்கும் வகையில் உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த இந்திய சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக, தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் சில சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகள் உட்பட பல்வேறுவிதமான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்பட உள்ளது.
உ.பி. சிறுமிகள் கொலை; 6 பேர் கைது
லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மாலை 17, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக, சுகைல், ஜூனைத், ஹபிசுல் ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் சோட்டு ஆகிய ஆறு பேர் கைதாகியுள்ளனர். அவர்கள் மீது கொலை, காயப்படுத்துதல், வீட்டில் அத்துமீறி நுழைதல், வன்புணர்வு ஆகிய பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து சிறுமிகளின் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

