முதல்வர் ஹிமந்த பிஸ்வா: அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் புதிய சகாப்தம்
புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் நிலையான அமைதியை ஏற்படுத்த, 8 தீவிரவாதக் குழுக்களுடன் அசாம் மாநில அரசும் மத்திய அரசும் நேற்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அசாம் மாநிலத்தில் தீவிரவாதக் குழுக்கள் பல இயங்கி வந்தன. இவற்றில் சில கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கியிருந்தனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் 8 தீவிரவாதக் குழுக்கள் கையெழுத்திட்டன.
ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அசாம் அமைப்பு, பிர்சா மின்னல் படை, சந்தல் புலிப் படை, ஆதிவாசி மக்கள் ராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ''அசாம் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் புதிய சகாப்தம் ஏற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்,'' என்றார்.
தடை செய்யப்பட்ட உல்ஃபா, காமத்பூர் விடுதலை அமைப்பு ஆகியவை தவிர இதர தீவிரவாத அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆகஸ்ட் மாதம் குகி பழங்குடி யூனியன் தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். ஜனவரி மாதம் திவா விடுதலைப் படை, ஐக்கிய கூர்க்கா மக்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தனர்.

