தெலுங்கானா தலைமைச்
செயலகத்துக்கு அம்பேத்கரின் பெயர்
ஹைதராபாத்: இந்திய சட்டத்தை இயற்றி, பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த டாக்டர் அம்பேத்கரின் பெயரே புதிய தலைமைச் செயலகத்துக்கு சூட்டப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் அரசியல் சாசன சட்டப் பிரிவு 3-ன் படியே தெலுங்கானா மாநிலம் உருவானது. இந்த மாநிலம் உருவாக அம்பேத்கரும் ஒரு காரணம். இதேபோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் டாக்டர் அம்பேத்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சந்திரசேகர ராவ் கூறினார். தெலுங்கானா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம் ஹைதராபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. அப்பணிகளை நேற்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ், பார்வையிட வருகை தந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உ.பி.யில் கனமழை: ராணுவ வளாகச் சுவர் விழுந்து 9 பேர் பலி
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதில்
9 பேர் உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயம் அடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கேரளாவில் ராகுல் காந்திக்கு
உற்சாக வரவேற்பு
திருவனந்தபுரம்: ராகுல் காந்தி தொடர்ந்து 9வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுடன் நேற்று காலை சுமார் 6.30 மணிக்குத் தொடங்கினார். அதன்படி கொல்லம் போளயத்தோடு சந்திப்பில் இருந்து தொண்டர்கள் புடைசூழ ராகுல் காந்தி புறப்பட்டார். காலை 11 மணி அளவில் கொல்லம் நீண்டகரை பகுதியில் நடைப் பயணத்தை நிறைவு செய்தார். இந்த நடைப் பயணத்தின்போது சாலைகளின் இரு பக்கமும் திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தியின் நேற்றைய 9வது நாள் நடைப் பயணத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெலும் பங்கேற்றார்.
குலாம் நபி ஆசாத்திற்கு மிரட்டல்
அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய குலாம் நபி ஆசாத், தீவிரவாதக் குழுக்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் பாஜகவிற்காக செயல்படும் துரோகியாக மாறிவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ள தீவிரவாதக் குழு ஒன்று குலாம் நபி ஆசாத்திற்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

