புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் நேற்று 2வது கட்டமாக நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுபானத் தொழிலதிபர்கள், விநியோகிப்பாளர்கள் இத்தொழிலில் உள்ள விநியோகச் சங்கிலித் தொடரில் இருப்பவர்களுக்கு தொடர்புள்ள இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழகம் வந்திருந்தார். தமிழகத்தில் அவர் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த சோதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப்பெற்றது.
இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம் சாட்டினார்.
துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில் மணிஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் ஆக. 19ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

