சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங், நாளை பாஜகவில் இணைய இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அம்ரிந்தர் சிங், பஞ்சாப் முதல்வராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2015ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக அம்ரிந்தர் சிங் பொறுப்பேற்றார்.
இவரது தலைமையில் 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அதையடுத்து, இவர் முதல்வராகப் பதவி ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அம்ரிந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, இவர் முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி நேர்ந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த அம்ரிந்தர் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
நவம்பர் 2ஆம் தேதி பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியிலும் இவர் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், லண்டன் சென்று முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அம்ரிந்தர் சிங், அண்மையில் நாடு திரும்பினார்.
இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அம்ரிந்தர் சிங் சந்தித்தார்.
அப்போது, பாஜகவில் தான் இணைவது குறித்தும் தனது கட்சியை பாஜகவில் இணைப்பது குறித்தும் அவர் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் நாளை அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பாலியாவால் தெரிவித்துள்ளார்.
அம்ரிந்தர் சிங்குடன் பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஒருவர், ஏழு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாகவும் கட்சியை இணைக்கும் விழா அடுத்த வாரம் சண்டிகரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பஞ்சாப் மக்கள் கட்சியின் மற்ற பொறுப்பாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும் பிரித்பால் சிங் பாலியாவால் தெரிவித்துள்ளார்.

