வரிந்துகட்டும் நான்கு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள்

2 mins read
221adea1-3074-4d7e-946e-bb8983e37fe9
-

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் நீடிக்கும் மோதல் போக்கு

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு மாநி­லங்­களில் ஆளு­நர்­கள், முதல்­வர்­க­ளுக்கு இடையே நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் மோதல் போக்கு நிலவி வரு­கிறது.

இதை­ய­டுத்து, ஆளு­நர்­க­ளுக்கு உரிய அதி­கா­ரங்­க­ளைக் குறைக்க வேண்­டும் என மாநி­லக் கட்­சி­கள் குரல் கொடுத்து வரு­கின்­றன.

குறிப்­பாக, மாநி­லங்­களில் செயல்­படும் பல்­க­லைக்­க­ழ­கங்­களுக்­கான துணை வேந்­தர்­களை நிய­மிப்­ப­தில் ஆளு­நர்­கள் குறுக்­கிடு­வதை ஏற்க இய­லாது என மாநில அர­சு­கள் தெரி­வித்­துள்­ளன.

தற்­போது மேற்கு வங்­கம், கேரளா, தெலுங்­கானா, தமி­ழ­கம் ஆகிய நான்கு மாநி­லங்­க­ளி­லும் ஆளு­நர், முதல்­வர் இடை­யே­யான மறை­முகப் பனிப்­போர் குறித்து இந்­திய ஊட­கங்­களில் பல்­வேறு தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன.

மேற்கு வங்­கத்­தில் ஆளு­ந­ரு­டன் மோதல் போக்­கைக் கடைப்­பி­டித்து வரு­கி­றார் அம்மாநில முதல்­வர் மம்தா பானர்ஜி. கடந்த பல மாதங்­களாக மாநில அர­சின் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளைப் பகி­ரங்­க­மாக தெரி­வித்து வந்­தார் அம்­மா­நில ஆளு­ந­ராக பொறுப்பு வகித்த ஜக­தீப் தங்­கர். தற்­போது இடைக்­கால ஆளு­ந­ராக இல.கணே­சன் பொறுப்­பேற்­றுள்ள நிலை­யில், அர­சுக்­கும் ஆளு­நர் மாளி­கைக்­கும் இடை­யே­யான மறை­முக மோதல் சற்றே தணிந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

இதேபோல், தெலுங்­கா­னா­வி­லும் முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவுக்­கும் அம்­மா­நில ஆளு­நர் தமி­ழி­சைக்­கும் அவ்­வப்­போது மறை­முக மோதல் ஏற்­பட்டு வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் ஆளு­நர் ரவிக்­கும் முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்­கும் இடையே நேரடி மோதல் ஏதும் இல்லை என்­றா­லும், சில மசோ­தாக்­க­ளுக்கு ஆளு­நர் மாளிகை ஒப்­பு­தல் அளிப்­ப­தில் மிகுந்த தாம­தம் ஏற்­ப­டு­வ­தாக திமுக அரசு குறை கூறி­யுள்­ளது.

மேலும், பல்­க­லைக்­க­ழக நிய­ம­னங்­கள் உள்­ளிட்ட சில விஷ­யங்­களை ஆளு­நர் மாளி­கை­யின் தலை­யீட்டை ஏற்க இய­லாது என்­றும் திமுக தலைமை விமர்­சித்து வரு­கிறது. இந்­நி­லை­யில், கேர­ளா­வில் ஆளு­நர், முதல்­வர் இடை­யே­யான மோதல் உச்சக் கட்டத்தை அடைந்­துள்­ளது.

அங்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஆளு­ந­ரின் அதி­கா­ரத்­தைக் குறைப்­பது உள்­ளிட்ட சில மசோ­தாக்­க­ளுக்கு ஆளு­நர் ஆரிப் முக­மது கான் ஒப்­பு­தல் அளிக்க மறுத்­து­விட்­டார்.

"மாற்­றுக்­க­ருத்து தெரி­விப்­ப­வர்­க­ளின் குரலை ஒடுக்­கு­வ­தில்­தான் கேரள அர­சின் முழுக் கவ­ன­மும் உள்­ளது," என ஆளு­நர் கூறி­யுள்­ளார். ஆனால், ஆளுநர் சட்டப்படி செயல்பட மறுப்பதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவி சாடியுள்ளார்.