சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் பலர் குளிக்கும் காட்சிகள் கொண்ட காணொளிப் பதிவுகள் இணையத்தில் வெளியானது தொடர்பாக மூன்று பேர் கைதாகி உள்ளனர்.
அவர்களை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மொத்தம் அறுபது மாணவிகளின் காணொளிகளை, பட்ட மேற்படிப்பு பயின்று வரும் மாணவி ஒருவர் ரகசியமாகப் பதிவு செய்து, அவற்றை தமது நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த நண்பர் இணையத்தில் அவற்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காணொளியைப் பதிவு செய்த மாணவியும் அவரது நண்பர் இருவரும் கைதாகினர்.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரிக்க மூன்று ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தை முன்வைத்து மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, எதிர்வரும் 24ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவிகள் சிலரை கனடாவில் இருந்து தொடர்புகொண்ட சிலர், குளியலறைக் காணொளிகள் தங்களிடம் உள்ளதாகவும் அவற்றை வெளியிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

