புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததன் மூலம் இதுவரை ரூ.35 ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை மிக மலிவான விலையில் வாங்குகிறது இந்தியா.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதை அடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளியல் தடைகளை விதித்துள்ளது. இதனால் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது ரஷ்யா.
இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா, இந்த நெருக்கடியைச் சமாளிக்க மிக மலிவான விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
இந்த வாய்ப்பை இந்திய அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வழக்கத்தைவிட இருமடங்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமானது முன் எப்போதும் இல்லாத வகையில் 150 விழுக்காடு அதிகரித்துள்ளது.
குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தபோதும், இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், அண்மைய சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

