சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அம்மாநில அரசுக்கு எதிராகச் செயல்படுவதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைமை குற்றம்சாட்டி உள்ளது.
மாநில அரசைக் கலைப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரைப்பேரம் நடப்பதாகவும் இதற்காக 'ஆபரேசன் தாமரை' திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சி செய்வ தாகவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பத்து பேரை பாஜக விலைக்கு வாங்கிவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, சட்டப்பேரவையில் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பகவந்த் மான் முடிவு செய்தார்.
இதையடுத்து, ஆளுநர் ஒப்புதலுடன் நேற்று பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தை திடீரென ஆளுநர் ரத்து செய்துள்ளார். இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஆளுநரின் முடிவை எதிர்த்து ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணியையும் நடத்தியது.
ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநர் மேற்கொண்ட 'ஆபரேசன் தாமரை' திட்டம் படுதோல்வி கண்டுவிட்டது என்றும் அக்கட்சித் தலைமை தெரிவித்தது.