இந்தியாவின் ஆகப்பெரிய வங்கி மோசடி எனத் தகவல்
அகமதாபாத்: வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் சிபிஐ அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
'ஏபிஜி ஷிப் யார்ட்' நிறுவனத்தின் தலைவரான ரிஷி கமலேஷ் அகர்வால், ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில், பல்வேறு காரணங்களைத் தெரிவித்து ரூ.22,842 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிறுவனம் குஜராத் மாநிலம், சூரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது.
கடன் தவணையை முறையாகச் செலுத்தாததால் கடன் கொடுத்த வங்கிகள் ரிஷி கமலேஷ் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தன. அவர் தமது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ரூ.2,468.51 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், 'எர்ன்ஸ் அண்ட் யங்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம், கடந்த 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது தொழில் பங்குதாரர்களும் பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
குறிப்பாக, குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, அரசுப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இவர்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரால் செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
இதன் எதிரொலியாக, ரிஷி கமலேஷ் அகர்வாலும் அவரது கூட்டாளிகளும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்குகள் பதிவாகின.
பல்வேறு வங்கிகளில் இருந்து குறிப்பிட்ட காரணங்களை முன்வைத்து கடன் பெற்ற ரிஷி அகர்வால் தரப்பினர், உரிய காரணங்களுக்காக செலவிடவில்லை என்றும் வேறு பல வழிகளில் செலவிட்டுள்ளனர் என்றும் சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.
இதனால் அவர் பெற்ற கடன் தொகையானது, வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடி எனக் கருதப்படுகிறது.
இதன் மூலம் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோரின் பட்டியலில், ரிஷி கமலேஷும் இடம்பிடித்துள்ளார்.