திருவனந்தபுரம்: கேரள அரசு குறித்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வெளிப்படையாக குற்றம்சாட்டுவதால் தாம் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் அலுவலகம் அரசியல் சூழ்ச்சி மையமாக மாறி வருகிறது என்று விமர்சித்தார்.
"அரசுடன் கருத்து வேறுபாடு இருந்தால் அதை கூறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவர் வெளிப்படையாக அரசை குற்றம்சாட்டுவதால் தான் நானும் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
"அமைச்சரவையின் முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும்," என்றார் முதல்வர் பினராயி விஜயன்.
எந்த ஓர் அமைப்புடனும் ஆளுநர் தொடர்பில் இருக்கக்கூடாது என்று விதிமுறை இருக்கும்போது, தமக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புண்டு என்று ஆளுநர் கூறியதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கூறலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக கேரள ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நேரடி வார்த்தைப்போர் நடந்து வருகிறது.

