மும்பை: பகல் நேரத்தில் விமானி அறையில் இருந்தபடியே கண்ணயர்வதுண்டு என்று இந்திய விமானிகளில் மூவரில் இருவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. களைப்புதான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
'சேஃப்டி மேட்டர்ஸ் ஃபவுண்டேஷன்' எனும் லாப நோக்கற்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
வட்டார, உள்நாட்டு, அனைத்துலக விமானிகள் என 542 பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். அவர்களில் கிட்டத்தட்ட 66 விழுக்காட்டினர், விமானப் பயணத்தின்போது சக விமானப் பணியாளர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் பகல் நேரத்தில் உறங்குவதுண்டு என்பதை ஒப்புக்கொண்டனர்.
"விமானிகள் தெரிவித்த பதில்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அவர்களில் 54 விழுக்காட்டினர் தீவிர பகல்நேர தூக்கக்கலக்கத்தாலும் 41 விழுக்காட்டினர் மிதமான தூக்கக்கலக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது," என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
அதன் காரணமாகவே, அவர்களில் 66 விழுக்காட்டினர் விமானி அறையிலேயே குட்டித்தூக்கம் போடுவதாக அல்லது தங்களை அறியாமலேயே கண்ணயர்ந்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.
விமான விபத்துகளுக்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 2010ஆம் ஆண்டு மங்களூரில் 158 பேரைப் பலிகொண்ட விமான விபத்துக்கும் இது ஒரு காரணமாகக் கூறப்பட்டது.
அந்த 2 மணி 5 நிமிடப் பயணத்தின்போது விமானி 1 மணி 40 நிமிடங்களுக்கு உறக்கத்தில் இருந்தார் என்று விமானி அறையிலுள்ள குரல்பதிவுக் கருவி காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்த நாள்கள் காலையில் விமானத்தை இயக்குவது, விமானிகள் களைப்படைய 74% காரணமாகக் கூறப்படுகிறது.
"காலை 6 மணிக்கு விமானத்தைக் கிளப்ப வேண்டுமெனில், அதிகாலை 3-3.30 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று பெரும்பாலான விமானிகள் கூறுகின்றனர். இதனால், இரவின் முக்கியமான நேரத்தில் அவர்களுக்கு ஓய்வு கிட்டாமல் போய்விடுகிறது," என்றார் 'சேஃப்டி மேட்டர்ஸ் ஃபவுண்டேஷன்' அமைப்பின் நிறுவனரான கேப்டன் அமித் சிங்.

