முசாஃபர்பூர்: கருப்பை அறுவை சிகிச்சைக்குச் சென்ற பெண்ணுக்குத் தெரியாமலேயே அவரின் இரு சிறுநீரகங்களும் அகற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரின் முசாஃபர்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இம்மாதம் 3ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து, 12 நாள்களுக்குப் பிறகே தெரியவந்தது.
சுனிதா தேவி என்ற 30களில் இருக்கும் அப்பெண் இப்போது வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் சிறுநீரக தானம் செய்ய அவரின் குடும்பத்தினரில் யாராவது முன்வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிருக்குப் போராடிவரும் சுனிதா தேவிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மாநில முதல்வர் உதவித்திட்டத்தின்கீழ் தேவையான அனைத்து உதவிகளும் அவருக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

