திருவனந்தபுரம்: லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்தபோது மகிழ்ச்சி அடைந்தவர், இப்போது அதை எண்ணிப் புலம்பும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 30 வயதான அனூப்புக்கு (படத்தில் தம் மகனுடன்) அண்மையில் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்தது. வரிகள் கழிக்கப்பட்டபின் கிட்டத்தட்ட ரூ.16 கோடி இவருக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
குடும்பத்தின் நிதிச்சுமையைப் போக்க மலேசியா சென்று வேலை பார்க்க இவர் நினைத்திருந்த நிலையில், அதிர்ஷ்டம் இவரது கதவைத் தட்டியது.
இந்நிலையில், நாள்தோறும் பண உதவி கேட்டு பலரும் இவரது வீட்டை முற்றுகையிட்டு வருவதால் நிம்மதியை இழந்து, புலம்பி, ஃபேஸ்புக்கில் ஒரு காணொளிப் பதிவை இட்டுள்ளார் திரு அனூப்.
"பரிசு விழுந்ததும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இப்போது நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. என்னால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை.
"இப்போது என் சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். வீடு மாறிய படியே இருந்தாலும் பலரும் அதனைக் கண்டுபிடித்து வந்து விடுகின்றனர். எல்லாரும் உதவி கேட்கின்றனர். என் கைக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை. இதை யாரும் நம்ப மறுக்கின்றனர்.
"உடல்நிலை சரியில்லாத என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட முடியவில்லை. நான் வேலைக்குச் சென்று இரண்டு மாதங்களாகிவிட்டன என்பதே உண்மை. இப்போது அண்டைவீட்டார்கூட எதிரிகளாகிவிட்டனர்," என்று கூறிப் புலம்பினார் அனூப்.
இதனால், தனக்கு முதல் பரிசு விழாமல் 2ஆம் பரிசு (ரூ.5 கோடி) அல்லது 3ஆம் பரிசு (ரூ.1 கோடி) விழுந்திருக்கலாம் என்று நினைப்பதாக இவர் கூறினார்.
திரு அனூப் வருத்தத்துடன் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு நாள் நிதி மேலாண்மைப் பயிற்சி அளிக்க இருப்பதாக கேரள மாநில லாட்டரித் துறை அறிவித்து இருக்கிறது.

