ஹைதராபாத்: மியன்மாரில் வேலைவாய்ப்பு மோசடியில் தொடர்புள்ள நான்கு நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 100-150 இந்தியர்களை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சு கூறியது.
ஆனால், குறைந்தது 500 இந்தியர்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று மீட்கப்பட்டவர்களில் சிலர் கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி தெரிவித்தது.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 10-20 இந்தியர்கள் மியன்மாரின் மியாவாடி, மே சாட் பகுதிகளுக்கு அழைத்துவரப்படுவதாகக் கூறப்பட்டது.
"இதுவரை, சூப்பர் எனர்ஜி, லஸாடா, ஸெந்தியன் குழுமம், துபாயைத் தளமாகக் கொண்ட ஓகேஎக்ஸ் பிளஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் அவ்வேலைவாய்ப்புகளை வழங்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது," என்று புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலக (ஹைதராபாத்) அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலை மோசடியில் சிக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சீனப் பெண்கள்போலக் காட்டி, மின்னிலக்க நாணய முதலீடு என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து அதிக அளவில் பணமோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது.
தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மியாவாடிப் பகுதி பெரும்பாலும் சீனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன.
"நாங்கள் உயிருடன் திரும்ப வேண்டுமெனில், இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுத்தாக வேண்டும்," என்று அங்கு சிக்கியுள்ள, மும்பையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு வேலை நாடுவோர், தரையிறங்கியபின் விசா பெற்றுக்கொள்ளும் முறையில் பேங்காக் சென்று, பின்னர் விரைவாக மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஜூலையில் முதன்முதலில் தெரியவந்தது.
"அதுமுதல், தாய்லாந்து, மியன்மாரில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக மியன்மாரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். யங்கூன், பேங்காக்கில் உள்ள தூதரகங்கள் மூலமாக அறிவுறுத்தல்களை விடுத்து வருகிறோம்," என்று புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.