புதுடெல்லி: இவ்வாண்டு ஜூலை 12ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியில் தாக்குதல் நடத்த 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ)' அமைப்பு திட்டமிட்டிருந்ததாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அதற்காக அவ்வமைப்பு ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்ததாகவும் சொல்லப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகக் கிட்டிய தகவலை அடுத்து, நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிரடிச் சோதனைகளை நடத்தி, 'பிஎஃப்ஐ' அமைப்பைச் சேர்ந்த பலரைக் கைதுசெய்தது.
இந்நிலையில், அந்த அமைப்பினர் கடந்த பல ஆண்டுகளாக ரூ.120 கோடி நிதி திரட்டியதை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது. அப்பணத்தைக் கொண்டு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் திரட்டி, நாட்டின் பல இடங்களிலும் வன்முறையையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சுயதீவிரவாத அமைப்பான 'பிஎஃப்ஐ'யிடமிருந்து விலகியிருக்குமாறு முஸ்லிம் சமூகத்தையும் அதற்குத் தடைவிதிக்க வேண்டுமென அரசாங்கத்தையும் 'அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்' கேட்டுக்கொண்டுள்ளது.

