அக்டோபரில் 5ஜி சேவைகள்
புதுடெல்லி: அடுத்த மாதம் முதல் வாரத்தில் இடம்பெற இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய 'இந்திய மொபைல் காங்கிரஸ்' கண்காட்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளைத் தொடங்கிவைப்பார் என இந்திய விரிவலை இயக்கம் அறிவித்துள்ளது.
18 மாதங்களாக வீட்டில் சடலம்
கான்பூர்: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இறந்து விட்டவரை 'கோமா'வில் இருப்பதாக வீட்டிலேயே வைத்திருந்தது உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. மனநிலை சரியில்லாதவராக அறியப்படும் அந்த ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் மனைவி, தம் கணவர் விரைவில் எழுந்து விடுவார் என நினைத்து, ஒவ்வொரு நாளும் அவரது உடல்மீது கங்கை நீரைத் தெளித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
சசி தரூர் போட்டி
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதற்கான வேட்புமனுவை முதல் ஆளாக நேற்று அவர் பெற்றுச்சென்றார். ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்; 9,000க்கும் மேற்பட்ட கட்சிப் பேராளர்கள் வாக்களிப்பர்.