புதுடெல்லி: வேலைக்காக வெளிநாடு செல்வோர் அங்கு வேலைதரும் நிறுவனங்கள் குறித்தும் வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்தும் நன்கு விசாரித்துத் தெரிந்துகொண்ட பிறகே அந்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில், வேலைவாய்ப்பு முகவர்களின் பேச்சை நம்பித் தாய்லாந்து சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியன்மார் எல்லையில் கொடுமைப்படுத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசின் ஆலோசனை வெளியானது.
தாய்லாந்தில் மென்பொருள் துறையில் வேலை செய்வதற்காக, இவ்வாண்டு ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில், தனியார் நிறுவனம் ஒன்று நேர்முகத் தேர்வு நடத்தியது. கேரளாவின் கொச்சி, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.
இரு நகரங்களில் இருந்தும் 100 மென்பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு சென்று சேர்ந்தவுடன் அவர்கள் மியன்மாருக்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும் இணைய வழிக் குற்றச்செயல்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மறுத்தவர்களை அடித்து, உதைத்ததுடன் சரியாக உணவு தராமல் கொடுமைப்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
மியான்மாரில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் மியாவடி நகரிலிருந்து 30 இளையர்கள் மீட்கப்பட்டதை அவை சுட்டின.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பவேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், "வேலை தருவதாகக் கூறும் வெளிநாட்டு நிறுவனங்கள், அவற்றின் வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்து, இந்தியாவில் அமைந்திருக்கும் அந்தந்த நாட்டுத் தூதரகங்களில் விசாரிக்கலாம். அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகே வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான மாநில, மத்திய அரசாங்கங்களின் துறைகளிலும் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம்," என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
வேலை தரும் நிறுவனத்தைப்பற்றி ஏற்கெனவே அதில் வேலைக்குச் சேர்ந்தவர்களை நாடி தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளும்படியும் அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.