பெங்களூரு: பெங்களூரில் 208 கோடி ரூபாய் (36 மில்லியன் வெள்ளிக்குமேல்) செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உந்துகணை இயந்திரத் தயாரிப்பு நிலையத்தை அதிபர் திரௌபதி முர்மு திறந்து வைத்துள்ளார்.
'கிரையோஜெனிக்' எனும் தாழ்வெப்பநிலையைப் பயன்படுத்தி இயந்திரங்களைத் தயாரிக்கும் முறையை இந்த நிலையம் பின்பற்றுகிறது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், பெங்களூரு எச்ஏஎல் நிறுவன வளாகத்தில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்நிலையத்தை அமைத்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையத்தின் திறப்பு விழாவில், கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
'ராக்கெட்' எனப்படும் உந்துகணைகளுக்கான 'கிரையோஜெனிக்' இயந்திரத்தின் தயாரிப்பில், இந்தியா தற்சார்பு நிலையை அடைய இஸ்ரோவும் எச்ஏஎல் நிறுவனமும் மேற்கொண்ட முயற்சியை அதிபர் முர்மு தமது உரையில் பாராட்டினார்.
இந்த நிலையத்தில் 70 உயர்தொழில்நுட்ப இயந்திரங்களும் சோதனைக் கருவிகளும் அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.
இதுவரை, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் மட்டுமே 'கிரையோஜெனிக்' இயந்திரங்களைத் தயாரிக்கும் நிலையங்கள் இயங்கிவந்துள்ளன. இத்தகைய சிறப்புடைய ஆறாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 'கிரையோஜெனிக்' இயந்திரங்களுடன் கூடிய பிஎஸ்எல்வி உந்துகணைகளைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில், எச்ஏஎல், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்களுடன் ரூ.860 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

