அயோத்தி: மறைந்த திரையிசைப் பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை ஒட்டி அவர் நினைவைப் போற்றும் விதமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் 40 அடி நீளத்தில் வீணையின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் எடை 14 டன்.
நகரின் முக்கிய சாலைச் சந்திப்பில் அமைந்துள்ள இந்தச் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வதாகக் கூறிய திரு மோடி, அயோத்தியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும், இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாடகிக்கு இது சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்றும் கூறினார்.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லதா மங்கேஷ்கர் சவுக் எனப்படும் சாலைச் சந்திப்பைத் திறந்துவைத்தார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார்.

