புதுடெல்லி: இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கும் 'பிஎஃப்ஐ' எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், துருக்கியில் செயல்படும் தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஐஎச்எச்' எனப்படும் மனித உரிமைகள், மனிதநேய நிவாரணப் பணிகள் ஆகியவற்றுக்கான அமைப்பு, துருக்கியில் செயல்படும் மனித உரிமைக்கான அமைப்பாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறது. ஆனால் அதற்கு அல்காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவில் இருந்த பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை அது கடத்தியதாகவும் புலனாய்வுத் துறையினர் கூறுகின்றனர்.
'ஐஎச்எச்' அமைப்பு, 'பிஎஃப்ஐ' அமைப்பின் தேசிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் இஎம்.அப்துல் ரகுமான், பி. கோயா இருவரையும் இஸ்தான்புல்லுக்கு அழைத்து உபசரித்ததாகத் தெரியவந்துள்ளது. 'நோர்டிக் மானிட்டர்' எனும் கண்காணிப்புக் குழு இதனைத் தெரிவித்தது.
துருக்கியில் 2016ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின்போது, அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம், 'பிஎஃப்ஐ' அமைப்பை இந்திய சமூகக் குழு என்றும் இதன் உறுப்பினர்களைக் காவல்துறையினர் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்ததை 'நோர்டிக் மானிட்டர்' கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டியது.
இதற்கிடையே, இம்மாதம் 22ஆம் தேதி நாடு முழுவதும் 'பிஎஃப்ஐ' அமைப்புடன் தொடர்பு உடைய இடங்களில் சோதனை நடத்துவதற்கு முன்பு, கடந்த 17ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உளவுத்துறையின் முக்கிய அதிகாரிகளும் நாட்டின் முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
'பிஎஃப்ஐ' அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை சூபி மற்றும் பரெல்வி மதகுருமார்கள் வரவேற்றுள்ளனர். "தீவிரவாதச் செயலைத் தடுக்க, சட்டப்படி மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அனைவரும் அமைதிகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது," என்று அனைத்திந்திய சூபி சஜ்ஜதனாஷின் மன்றத் தலைவர் கூறியிருக்கிறார்.
அஜ்மீர் தர்காவின் ஆன்மிகத் தலைவர் ஜைனுல் அபிதின் அலி கான், "மத்தியஅரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒற்றுமை, இறையாண்மை, அமைதி ஆகியவற்றைச் சீர்குலைக்கவோ முயல்வோருக்கு இங்கு வாழும் உரிமை இல்லை," என்றார்.
அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரெல்வி, "தீவிரவாதச் செயலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை சரியானது," என்று கூறியுள்ளார்.
இவ்வேளையில், மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கேரளாவில் 'பிஎஃப்ஐ' அமைப்பைக் கலைத்துவிட்டதாக அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். அவர், கருநாகப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் தடையுத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு விழிப்பு நிலையில் இருக்கும்படியும் சென்னை முழுவதும் நாலாயிரம் காவல்துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 'பிஎஃப்ஐ' அமைப்புக்குத் தடை விதித்து தமிழக அரசு அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
'பிஎஃப்ஐ' மீது நாடு முழுவதும் 1400க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'பிஎஃப்ஐ' அமைப்பின் இணையத்தளம் நேற்று முன்தினம் முடக்கப்பட்ட நிலையில், அதன் டுவிட்டர் பக்கம் நேற்று நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

