புதுடெல்லி: இந்தியாவின் மத்திய வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 5.4%லிருந்து 5.9% ஆக உயர்த்தியது.
மத்திய வங்கி இத்துடன் நான்காவது முறையாக வட்டி விகிதத்தைக் கூட்டி உள்ளது.
இதன் விளைவாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியப் பொருளியல் இந்த ஆண்டு 7%தான் வளரும் என்றும் மத்திய வங்கி கணித்துள்ளது. அந்த வளர்ச்சி 7.2% இருக்கும் என்று இந்த வங்கி முன்பு அறிவித்தது.
வட்டி விகித அதிகரிப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், இந்தியப் பொருளியல் தொடர்ந்து மீட்புத்திறன் கொண்டதாக இருக்கிறது என்றார்.
உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்து உள்ளதாகவும் நாட்டின் பணவீக்கம் இப்போது 7% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் 6% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.