பெங்களூரு: இந்தியாவில் இயங்கி வரும் திபாலாஜி பெட்ரோகெம் என்ற தனியார் பெட்ரோலிய நிறுவனத்துக்கு அமெரிக்கா திடீர் தடை விதித்துள்ளது.
ஈரான் மீதான பல்வேறு பொருளியல் தடைகளை மீறி இந்த நிறுவனமானது, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் பொருள்களை வாங்கி உள்ளது என்பது அமெரிக்காவின் புகார் ஆகும்.
மேலும், ஈரான் எண்ணெய் பொருள்களைப் பெற்று சீனாவுக்கு விற்பனை செய்ததாகவும் இந்திய நிறுவனத்தின் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே இந்திய நிறுவனம் ஒரு தரகரைப் போல் செயல்பட்டதாக தெரிய வந்ததை அடுத்து, இந்த அதிரடித் தடையை விதிப்பதாகவும் இதை இந்திய அரசுக்கு எதிரான தடையாகப் பார்ப்பது சரியல்ல என்றும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.