அமைச்சர் அமித்ஷா வருகையின்போது சம்பவம்; தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்பு
ஸ்ரீநகர்: இந்தியா வசம் உள்ள காஷ்மீரில் சிறைச்சாலை தலைமை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை அந்த மாநிலத்திற்கு வருகை அளித்து இருக்கும் வேளையில், இந்தப் படுகொலை நிகழ்ந்து இருக்கிறது.
ஹெர்மண்ட் குமார் லோகியா, 57, என்ற அந்த உயர் அதிகாரி, ஸ்ரீநகர் வட்டாரத்தின் சிறைச்சாலைத் துறை தலைமை இயக்கு நராக பணியாற்றி வந்தார்.
அவர் தனது வீட்டில் திங்கட்கிழமை இரவு கழுத்து அறுபட்ட நிலையில் மாண்டுகிடந்தார். உடலில் தீப்புண்கள் காணப்பட்டன.
அந்த அதிகாரியின் மரணத்தையொட்டி அவர் வீட்டில் வேலை செய்த யாசிர் லோகார், 23, என்பவர் கைதாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளையில், அந்த அதி காரியைக் கொலை செய்தது தானே என்று இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்று தெரிவித்தது.
'பிஏஎஃப்எஃப்' என்ற அந்த அமைப்பு, சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
"இது ஒரு தொடக்கம் தான். இந்தக் கொலை காஷ்மீருக்கு மூன்று நாள் வருகை அளித்து உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு சிறிய அன்பளிப்பு," என்றும் அந்த அமைப்பு கூறியது.
என்றாலும் அந்த அறிக்கையை வெளியிட்டது அந்த அமைப்புதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று குறிப்பிட்டது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கும் அமித்ஷா, நேற்று ரஜோரி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரதமர் மோடி ஆட்சியில் பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பது குறைந்து வருகிறது என்றும் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதன் மூலம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மலைப் பிரதேச மக்களுக்கு இட ஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைத்துள்தாகவும் அவர் கூறினார்.
இவ்வேளையில், ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இணையச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.

