புதுடெல்லி: இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பாஜக, அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் 'தூய்மை இந்தியா' திட்டத்தைத் தொடங்கியது.
அத்திட்டம் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் திரவுபதி முர்மு, இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 60 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளி யில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு உள்ளனர் என்றார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதன்படி நாட்டில் உள்ள ஆறு லட்சம் கிராமங்களிலும் 100% கழிவறைகளை கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 2024-க்குள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.