நாடு முழுவதும் நீடிக்கும் மழை; வடமாநிலங்களில் 13 பேர் பலி
புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வடக்கு தொடங்கி தெற்கு வரை பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய சில நாள்களாக நாட்டின் தலைநகர் புதுடெல்லி தொடங்கி, வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளை கனமழை புரட்டிப்போட்டு வருகிறது.
வடமேற்கு மாநிலங்களான உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலும் உத்தரகண்ட் மாநிலத்திலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெலுங்கானாவுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வடதமிழகம், புதுவையை ஒட்டிய கடற்பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்றும் அதன் காரணமாக தெலுங்கானா, வடக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய புயல் சின்னமானது, தெலுங்கானா மாநிலத்தில் தெற்கு, கிழக்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதால், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்தியாவில் இமயமலையின் வடமேற்குப் பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துவிட்டனர்.
டெல்லியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒரு நன்மையும் விளைந்துள்ளது. மழைப்பொழிவால் அங்கு காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக டெல்லியில் காற்று மாசு ஆகக்குறைவாகப் பதிவானது. மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று இரவு வரை கன மழை நீடிக்கும் என்றும் ஒடிசா, பீகார் மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

