கேரள முதல்வர்: 'ஒரே தேசிய மொழி' என்பது நம்முடைய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது
திருவனந்தபுரம்: இந்தி மொழி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியைப் பயிற்று மொழியாக ஆக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் வட்டார மொழிகள் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் 11வது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆங்கிலம் மூலம் பயிற்றுவிப்பதை விருப்பத் தேர்வாக மாற்றலாம் எனவும் குழு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன்(படம்), பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், 'இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அதில் ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்க முடியாது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை மட்டும் முதன்மை மொழியாகவோ அல்லது பயிற்றுமொழியாகவோ மாற்றிவிட முடியாது.
ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
இந்த நிலையில், அவர்களில் பாதிப்பேருக்கு மேல் உள்ளவர்களைப் பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சமூக நலனுக்கு நன்மை பயக்காது. கல்வித் துறையில் மாநிலம் சார்ந்த பார்வைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பயிற்றுமொழிகள் விவகாரத்தில் அவசரப்பட்டு மத்திய அரசு எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய மொழிகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மற்ற மொழிகளைவிட ஒரு மொழியை மட்டுமே பயிற்றுமொழியாக முன்னிலைப்படுத்துவது இந்தித் திணிப்பாகவே பார்க்கப்படும். இது, நம்முடைய கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல. எனவே, நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தி பயிற்சிமொழி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே கருத்தை வலியுறுத்தியிருந்த தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு இந்தியைப் புகுத்தி மீண்டும் ஒரு மொழிப்போரை எங்கள் மீது தூண்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

