பெங்களூரு: மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் (படம்) செவ்வாய்க்கிழமை பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ரவிக்குமார் விலகியதால் நிறுவனத்துக்குப் பெரும் இழப்பு எனவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்துவரும் ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருபதாண்டுகள் பணியாற்றியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பல்வேறு துறை சார்ந்த பொறுப்புகளை வகித்ததுடன் காப்பீடு மற்றும் கட்டண வணிகத்தையும் வழிநடத்தினார்.
ரவிக்குமாரின் பதவி விலகலைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்கு விலை நேற்று முன்தினம் 2.65 விழுக்காடாக சரிந்தது.
ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உலக அளவில் உள்ள அனைத்து தொழில் சேவைப் பிரிவுகள் உள்ளிட்ட பல துறைகளையும் கவனித்து வந்தார்.

