அமராவதி: கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அனந்தபூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த இடைவிடாத மழையால் ஏராளமான குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் அனந்தபூர், ஸ்ரீசத்யசாய் மாவட்டங்களில் மழை வெளுத்துக் கட்டியது. தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து ஓடைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அனந்தபூர் நகரில் உள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். யாலேறு, ஆலமூர் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், அதன் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அனந்தபூர், ஸ்ரீசத்யசாய் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மூன்றடி உயரத்துக்கு மழை நீர் சாலைகளில் வெள்ளம்போல் ஓடியது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் தஞ்சமடைந்தனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற கனமழை பெய்ததில்லை என்று பொதுமக்கள் கூறும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா நிலவரம்
இதற்கிடையே அண்டை மாநிலமான கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. விஜயாப்புரா மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
அங்குள்ள தோனி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் வடகர்நாடகத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளம், மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
1,300 கிராமங்கள் பாதிப்பு
வடமாநிலங்களிலும் மழை தீவிரமடைந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சுமார் 1,300க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களில் மட்டும் அங்கு வெள்ளப்பெருக்கில் சிக்கி மூன்று பேரும் மின்னல் தாக்கி ஒருவரும் பாம்பு கடித்து ஒருவரும் என ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

