பேராசிரியர் சாய்பாபா விடுவிப்பு
மும்பை: கடந்த 2014ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஹேம் மிஸ்ரா என்பவர், மாவோயிஸ்ட்டுகளுக்கும் பேராசிரியர் சாய்பாபாவுக்கும் இடையே தாம் தூது சென்றதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாய்பாபாவை விடுவித்துள்ளது.
நவம்பர் 12ல் இமாச்சலப் பிரதேச தேர்தல்
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

