புதுடெல்லி: சட்டப்படிப்பு தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற மாநில சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முக்கிய வழக்குகள் அடங்கிய மின்னிலக்க நூலகத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும், அந்த நூல்கள் மாநில மொழிகளில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதித் துறையில் தாமதமாக நீதி வழங்கப்படும் விவகாரம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நீதித் துறை தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் குடிமக்கள் சட்டத்தை முழுமையாக அறிந்துகொள்ள மொழி தடையாக இருக்கக்கூடாது என்றும் புதிய சட்டங்களை வரையறுக்கும்போது, சாமானிய மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் மொழியில் அவற்றை எழுத வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
"மின்னிலக்க சட்ட நூலகத்தை உள்ளூர் மொழியில் உருவாக்க வேண்டும். இது சாமானியர்களின் சட்ட அறிவை அதிகரிக்கும்.
"நாடு முழுவதும் மின்னிலக்க நீதிமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் காணொளி வாயிலாக விசாரணைகள் நடைபெற்றன. இது தவிர வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் திட்டமும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது," என்றார் பிரதமர் மோடி.
நாட்டில் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள '5ஜி' சேவை மூலம் நீதித்துறையின் மின்னிலக்கத் திட்டங்கள் மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

