அரசியல் பார்வையாளர்கள்: இந்தி எதிர்ப்பு மாநிலங்களை ஒருங்கிணைக்க வாய்ப்பு
கோல்கத்தா: மத்திய அரசு இந்தி மொழியைத் திணிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் புகார் எழுப்பியுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இவ்விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிரான புதிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருப்பது புது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தென் மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக வரிந்துகட்ட தயாராகி வருகிறார்.
"ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசுடன் மோதி வருகிறார் மம்தா. மேற்கு வங்க நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக அவர் பலமுறை சாடியுள்ளார்.
"இந்நிலையில் இந்தித் திணிப்புக்கு எதிரான அவரது போராட்டத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களிலும் தேசிய அளவிலான அரசியல் களத்திலும் எளிதில் ஆதரவு கிடைக்கக்கூடும். இதைக் கணக்கிட்டு முதல்வர் மம்தா புதிய வியூகத்தை அமைக்கும் வாய்ப்புண்டு," என்கிறார் அரசியல் பார்வையாளர் நிர்மல்யா பானர்ஜி.
கேரளா, தமிழகம், தெலுங்கானா மாநிலங்களைப் போன்றே மேற்கு வங்கத்திலும் ஆளுநர், முதல்வர் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்தித் திணிப்புக்கு எதிரான மாநிலங்கள் என்ற புதிய குடையின் கீழ் எதிர்க்கட்சிகளைத் திரட்ட முதல்வர் மம்தா முயற்சி செய்யக்கூடும் என்பது அரசியல் கவனிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையே அமித்ஷா தலைமையிலான மத்திய அரசின் அலுவல்பூர்வ மொழிக்கான குழுவின் பரிந்துரைகளுக்கு இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அனைத்து நிலைகளிலும் குறிப்பாக ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிலையங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க இயலாது என்று அம்மையம் கூறியுள்ளது.

