புதுடெல்லி: தம் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு முழுவதும் போலியானது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் முன்னிலையான அவரிடம் சுமார் ஒன்பது மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான வழக்கு தொடர்பில் எந்தவித ஆதாரங்களும் சிபிஐ வசம் இல்லை என்று குறிப்பிட்டார்.
"என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளை வைத்து அனைத்தையும் புரிந்துகொண்டேன்.
"என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக நான் அழைக்கப்படவில்லை. டெல்லியில் 'ஆபரேஷன் தாமரை' நடவடிக்கையை வெற்றிபெறச் செய்யவே இந்த விசாரணை நடந்துள்ளது," என்றார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.

