திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அங்குள்ள 27 சிற்றூர்களைச் சேர்ந்த விவசாயிகள் கிட்டத்தட்ட 35,000 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்குக் கொடுத்தனர்.
அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு தெலுங்கு தேசம், பா.ஜ.க, ஜனசேனா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதேபோல் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 37 நாட்களாக ஆந்திர மாநிலம் முழுவதும் நடைப் பேரணி வகுத்துச் சென்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 37வது நாளாக ராஜமுந்திரி, ஹர்ஷ வள்ளி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வழிபாடு செய்துவிட்டு நடைப் பயணத்தைத் தொடங்கினர்.
அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மார்தாணி பரத், பில்லி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர்.
அப்போது "விவசாயிகள், நாங்கள் 35,000 ஏக்கர் விவசாய நிலங்களை தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கொடுத்து உள்ளோம்.
"நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தைக்கூட கொடுக்காமல் மூன்று தலைநகரம் அமைக்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது," என்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் செருப்பு, கற்களை விவசாயிகள் மீது வீசி சரமாரியாக தாக்கினார்.
இதில் விவசாயிகள் பலருக்கும் இலேசான காயம் ஏற்பட்டது. அதையடுத்து இரு தரப்பினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பிரச்சினை மேலும் முற்றாமல் இருக்க இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

