பெங்களூரு: பெங்களூரில் புதன்கிழமை இரவுமுதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த பேய் மழையால், நகரின் கிழக்கு, தெற்கு, மத்தியப் பகுதிகள் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளித்தன.
"இந்தப் பாதிப்பு இத்தோடு முடிந்துவிடாது, அடுத்த மூன்று நாள்களுக்குத் தொடரும்," என இந்திய வானிலை மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கனமழையால் பெங்களூர் நகரின் பெல்லாந்தூர், சிவாஜி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. சில வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.
சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பலரும் மெட்ரோ ரயில் சேவையை நாட வழக்கத்தை விட மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பெங்களூர் சிவாஜி நகரில் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. சிலர் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் இறங்கி அடித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சிரமப் பட்டு மீட்டனர்.
தற்போது இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த மழை இன்னும் சில நாள்கள் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளதால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, தும்கூர் மாவட்டம், பாவகடாவில் 14,800 கோடி ரூபாய் செலவில், 13,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி உற்பத்திப் பூங்கா, மழை நீரில் மூழ்கியதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர்மழையால் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. திரு மணி ஏரி நிரம்பி, உபரி நீர் பூங்கா விற்குள் பாய்கிறது.
இப்பூங்காவில் 2,050 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், மின் உற்பத்தி இப்போது கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

