எங்கு பார்த்தாலும் செழுமை. அறுவடையான வயல், வாய்க்கால், குளம் நீர்நிலைகள் எங்கும் தண்ணீர். வயல்களில் கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு வாத்துகள்.
வாய்க்காலில் மூழ்கியும் எழுந்தும் கும்மாளமிட்டு திரிந்துகொண்டிருந்தன. குவாக் குவாக் சத்தம்காதில் ரீங்காரமிட்டது.
வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். சாலையின் ஓரமாக இருந்த ஒரு குளக்கரையில் இந்த மாது அமர்ந்திருந்தார்.
குச்சியுடன் இருந்த அவரை அணுகி இந்த வாத்துகள் உங்களு டையதா என்று கேட்டபோது ஒவ்வொரு சொல்லாக யோசித்து யோசித்து தமிழில் பேசினார்.
அந்த மாது ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும் வாத்து முட்டைகளை விற்று பணம் சம்பாதிப்பதற்காக தமிழ்நாடு வந்திருக்கிறார் என்பதும் பின்னர் தெரிந்தது.
"தமிழ்நாடு எப்போது வந்ததாலும் எங்களை வரவேற்று உதவி உபசரிக்கிறது. நாங்கள் வளர்க்கும் வாத்து எங்களை வாழ வைக்கிறது," என்று அவர் சொன்னதை அந்த மாதின் கணவரின் சகோதரரான திரு ராமா, 38, என்பவரின் உதவி யுடன் புரிந்துகொண்டேன்.
"ஆயிரம் வாத்துகளுடன் வந்துள்ளோம். இன்னும் ஓரிரு மாதங்கள் தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் இங்கும் அங்குமாக இருப்போம். பிறகு எங்கள் வாத்துகளுடன், கையில் ஏறக்குறைய ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை பணத்துடன் எங்கள் ஊருக்குச் சென்றுவிடுவோம்," என்று கூறிய திருமதி தனலட்சுமி என்ற அந்த 30 வயது மாதை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முட்டம் என்ற ஒரு கிராமத்தில் சந்தித்தேன்.
காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலான வயல்களில் குறுவை அறுவடை முடிந்து அடுத்த நடவுக்கு ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன.
ஆந்திரப் பிரதேசம் பீமாரம் என்ற பகுதியைச் சேர்ந்த திரு வெங்கண்ணா, 40, திருமதி தனலட்சுமி தம்பதிக்கு வாத்து முட்டை உற்பத்திதான் வாழ்க்கை.
அவர்களின் சொந்த ஊர் பகுதிகளில் இப்போது வயலில் நடவு வேலை நடக்கிறது. ஆகையால் வயல்களில் வாத்துகளை மேய்த்து வளர்ப்பது சிரமம். வாத்துகளுக்கு நீர்நிலைகள்தான் உயிர்நாடி.
இதன் காரணமாக தங்களுடைய வாத்துகளுடன் வெங்கண்ணா தம்பதியர், அறுவடை ஆகி நீர்நிலைகள் நிரம்பிக் கிடக்கும் தமிழக டெல்டா பகுதிக்கு இந்தப் பருவத்தில் வருகிறார்கள்.
அறுவடையாகி இருக்கும் வயல்களில் பகல் நேரத்தில் வாத்துகளை மேய்க்கிறார்கள். மாலையான தும் வாத்துகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு பட்டியில் அடைத்துவிடுகிறார்கள். கிராமத்தை ஒட்டி உள்ள காலியான மேடான பகுதிகளில் தற்காலிக வேலிகளுடன் கூடிய பட்டியிலேயே தங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள்.
பட்டியில் அதிகாலையில் வாத்துகள் முட்டையிடும்.
"இரையைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 முட்டைகள் கிடைக்கும். வயலில், வாய்க்காலில் நத்தை, மீன், புழு போன்ற பலவற்றையும் வாத்துகள் சாப்பிடும்.
"நன்றாக இரை கிடைத்தால் அதிக முட்டைகளை எதிர்பார்க்கலாம். தஞ்சாவூரில் இருந்து வரும் வியாபாரிகளிடம் வாத்து முட்டைகளை ஒன்று ரூ.4 அல்லது 5 ரூபாய்க்கு விற்றுவிடுவோம். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 2,000 கிடைக்கும்.
"பட்டியில் வாத்துக்குத் தண்ணீருடன் கலந்து மருந்தையும் தீனியாக கொடுத்துவிடுவோம். இத னால் அவ்வளவாக வாத்துகளை நோய் தாக்காது," என்று திருமதி தனலட்சுமி கூறினார். அவரின் கணவர் திரு வெங்கண்ணா, அறுவடையான நீர்நிலைகள் நிறைந்த வயல்வெளியைத் தேடி கும்பகோணம் பக்கம் போயிருந்தார்.
திரு வெங்கண்ணாவின் தம்பி ராமா அப்போது அந்த மாதுக்குத் துணையாக வாத்துகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.
வெங்கண்ணா-தனலெட்சுமி தம்பதியின் 8 வயது மகன் நாகையா தன் தாயாருடன் இருந்தார்.
தங்கள் இரண்டு புதல்விகளை தங்கள் கிராமத்தில் உறவினர்களிடம் விட்டுவிட்டு இவர்கள் தமிழ்நாடு வந்திருக்கிறார்கள்.
"எங்களிடம் வளரும் வாத்து ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 200 முதல் 250 முட்டைகளையிடும். ஒரு வாத்து ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.
"ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வாத்தை ரூ.150 முதல் ரூ.200க்கு விற்றுவிடுவோம். வாத்து குஞ்சு ரூ.50க்கு வாங்குகிறோம்.
"கிட்டத்தட்ட ஏழு, எட்டு மாதங்களில் வாத்து முட்டையிடத் தயாராகிவிடும். வாத்துகளை வாடகைக் கூண்டு வாகனத்தில் கொண்டு வருவோம், கொண்டு செல்வோம். நாங்கள் பீமாரம் சென்று சேரும்போது அங்கு அறுவடை காலம் தொடங்கிவிடும்.
"வயல்கள் காலியாகிவிடும். அங்கு எங்கள் வாத்துகளை மேயவிட்டு முட்டைகளைச் சேகரித்து பணம் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டுகிறோம்," என்றார் அந்த மாது.
"வாத்து மந்தமான உயிரினம் என்று சொல்லி கிண்டல் செய்வதை நீங்கள் கேட்டு இருக்கலாம்.
"ஆனால் எங்களை வாழ வைப்பது வாத்துதான் என்று அந்த மாது, ஒரு வாத்தை என்னிடம் காட்டியபடி திக்கி திக்கி தமிழில் சொன்னதைக் கேட்டபடியே அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
ஒரு கி.மீ. தொலைவு வந்த பிறகும் குவாக் குவாக் சத்தம் இலேசாக கேட்டபடியே இருந்தது.

