புதுடெல்லி: இந்தியாவில் ஏழ்மை, பணவீக்கம், பசி பட்டினி இருந்தாலும்கூட உலகின் US$100 மில்லியன் பணக்காரர்களின் எண் ணிக்கை அந்த நாட்டில் அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகளவில் குறைந்தபட்சம் US$100 மில்லியன் வைத்துள்ள (ரூ.830கோடி) பணக்காரர்கள் பட்டியலை அந்த ஆய்வறிக்கை முதன்முதலாக வெளியிட்டு இருக்கிறது.
அத்தகைய பணக்காரர்கள் உலகத்தில் 25,490 பேர் இருக்கிறார்கள். இந்தியாவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,132. பிரிட்டன், ரஷ்யா, சுவிட்சர்லாந்து நாடுகள் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் இருக்கின்றன.
இப்போது சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், 2032ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா இந்த அம்சத்தில் சீனாவை விஞ்சிவிடும் என்று ஹென்லே& பார்ட்னர்ஸ் என்ற அனைத்துலக முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் ஆசியாவில் வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர்களில் கிட்டத்தட்ட 57 விழுக்காட்டினர் ஆசியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் அறிக்கை கணிக்கிறது.
US$100 மில்லியன் பணக்காரர்களில் 38 விழுக்காட்டினர் அதாவது, 9,730 பேர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் 4% மட்டுமே அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
சீனாவில் இத்தகைய பணக்காரர்களின் எண்ணிக்கை 2,021 ஆகவும் பிரிட்டனில் 968 ஆகவும் இருக்கிறது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
கடந்த 1990களில் US$30 மில்லியன் சொத்தை வைத்து இத்தகைய பெரும் பணக்காரர்கள் கணக்கிடப்பட்டார்கள். இப்போது அந்தத் தொகை US$100 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

