புதுடெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் நோக்கில் வேலைவாய்ப்புத் திருவிழா எனும் ஆள்சேர்ப்பு முயற்சியை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
இளையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் இலக்கு கொண்டுள்ள இந்த முயற்சியின் முதல்கட்டமாக 75,000 பேருக்கு நேற்று வேலை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்டு பேசிய திரு மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாக உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாக இந்தியா உயர்ந்திருப்பதாகக் கூறினார்.
"கடந்த 100 ஆண்டுகள் இல்லாத மிகப் பெரிய உலகளாவிய பொருளியல் நெருக்குதலின் விளைவாக பெரிய பொருளியலைக் கொண்டுள்ள பல நாடுகள் பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் சிரமப்படுகின்றன. இத்தகைய சவால் வெறும் 100 நாள்களில் மறைந்துவிட வாய்ப்பில்லை," என்றார் திரு மோடி.
வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் ஏறத்தாழ 20,000 பேருக்கு 50 மத்திய அமைச்சர்கள் வேலை நியமனக் கடிதங்களை வழங்கினர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ரயில்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வேலை நியமனக் கடிதங்களை வழங்கினார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் போபாலிலும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர் சண்டிகரிலும் வேலை நியமனக் கடிதங்களை வழங்கியதாக இந்திய ஊடகம் தெரிவித்தது.
வேலை நியமனக் கடிதங்கள் பெறுபவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் 38 மத்திய அமைச்சுகள், மத்திய அரசின் துறைகளில் வேலையில் சேருவர்.
இந்திய ஆயுதப் படை அதிகாரி, காவல்துறையில் உதவி ஆய்வாளர், வருமான வரி ஆய்வாளர் போன்ற பணிகளில் அவர்கள் நியமிக்கப்படுவர். இளையர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

