புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் வாகன நிறுத்துமிடக்
கட்டண வசூலில் நடைபெற்ற முறைகேடு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம்ஆத்மி மாநகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் கூறுகையில்,
"டெல்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியின்போது, வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை வசூலிக்க ஏலக்குத்தகை மூலம் நிறுவனம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது மக்களிடமிருந்து அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் கட்டணமாக வசூலித்தது. ஆனால் வசூலிக்கப்பட்ட தொகை மாநகராட்சிக்கு வந்து சேரவில்லை. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சியை ஏமாற்றுவதற்காக வேறு பல நிறுவனங்களைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக மாநகராட்சிக்கு ஏறத்தாழ ரூ.6 கோடி நட்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறுவனங்கள் பணத்தை மாநகராட்சிக்குத் திருப்பித் தரவில்லை. இந்த விவகாரம் குறித்து லெஃப்டினன்ட் கவர்னர் விசாரிக்க வேண்டும்," என ஆம் ஆத்மி மாநகராட்சிப் பொறுப்பாளர் துர்கேஷ் பதக் கூறினார்.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. டெல்லி மாநகராட்சி தனது வாகன நிறுத்து
மிடங்களை வணிகரீதியாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் உரிமத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் 6 கோடி ரூபாய் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அது தெரிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற
உள்ளது குறிப்பிடத்தக்கது.

