விஜயவாடா: ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வட மாலாபேட்டை அருகே உள்ள நாராயணதாஸ் சோட்டா என்ற இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டன.
அவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் திரண்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையில் பட்டாசு வாங்கிய சிறுவன் ஒருவன், கடைக்கு முன்பாக பெரிய சரவெடியைக் கொளுத்தினான். சரவெடி வெடித்து சிதறி பட்டாசுக் கடைக்குள் விழுந்தது. அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசில் தீப்பற்றி வெடித்ததால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்குத் தீ பரவியது.
இதனைக் கண்ட கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடையில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.
இதற்கிடையே, விஜயவாடாவிலும் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக 18 பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் 3 கடைகளுக்குத் தீ
பரவியது. கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில்
பட்டாசுக் கடையில் வேலை செய்த இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

