மும்பை: மராட்டிய மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள ஹோட்டல், பார் உரிமையாளர்களிடம் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில், அவர் பிணையில் வெளிவர மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அவரது பிணை மனுவை சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிராகரித்தது.
நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் நேற்று முன்தினம் வெளியானது.
அதில் அனில் தேஷ்முக்கின் பிணை மனுவை நிராகரித்ததற்கான காரணங்களை சிபிஐ நீதிமன்றம் குறிப்பட்டது.
"இந்த வழக்கில் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பெரிய அளவிலான பணம் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிகிறது. இதுபோன்ற 'ஒயிட் காலர்' குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. எனவே, இதுபோன்ற குற்றங்கள் மிகக் கடுமையானவை என எடுத்துக்கொள்ளப்படும்.
"மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள், சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை எனில் அது ஒட்டு மொத்த நாட்டையும் சீர்குலைத்துவிடும்.
"உணர்ச்சிவசப்படும் நேரத்தில் நொடிப் பொழுதில் கொலைக் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் பொருளாதாரக் குற்றங்கள் சமூகத்துக்கு ஏற்படும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல், தனிநபரின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு திட்டமிட்டு செய்யப்
படுகிறது," என்று சிபிஐ நீதிமன்றம் வெளியிட்ட பிணை நிராகரிப்பு உத்தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

