தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்துத் தீர்த்த பொதுமக்கள்
புதுடெல்லி: தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது தடையை மீறி பொது மக்கள் பட்டாசுகளை வெடித்ததால் டெல்லியில் காற்றின் தரம் வெகுவாகக் குறைந்தது.
உலக காற்றுத் தர குறியீடு அமைப்பு ஆசியாவில் உள்ள அதிக மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பத்து நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் எட்டு நகரங்கள் இந்தியாவில் உள்ளன. மேலும், காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் கட்டாருக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், தீபாவளியன்று சுவிட்சர்லாந்து நாட்டின் காற்றுத் தர குறியீடு அமைப்பு மேலும் ஒரு புதிய பட்டியலை வெளியிட்டது. அதன்படி, உலக அளவில் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் தொழிற்சாலைகள், வாகன புகை, கரியமில வாயு வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருவதாகவும் சுவிட்சர்லாந்து அமைப்பு தெரிவித்தது.
தீபாவளியன்று விடியற்காலையே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் காலை ஆறு மணிக்கே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து 323 புள்ளிகளாகப் பதிவானது. அதே சமயம் ஒப்பீட்டு அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் தீபாவளி சமயத்தில் பதிவானதைவிட, இந்த ஆண்டு காற்று மாசு பாதிப்பு குறைவுதான் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக காற்றின் தரக் குறியீடு 50 புள்ளிகளுக்குள் இருந்தால் தரமான காற்று எனக் கருதப்படுகிறது. 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அபாயகரமானது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் டெல்லி மாநில அரசு ஏற்கெனவே தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.
எனினும், கொரோனா நெருக்கடிக்குப் பிறகு அச்சமின்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய டெல்லி மக்கள், பட்டாசுகளை வெடிப்பதிலும் குறைவைக்கவில்லை. தடையை மீறி ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்துத் தீர்த்தனர்.
தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதுவும் காற்று மாசுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதற்கிடையே, கடந்த தீபாவளித் தினத்தன்று மட்டும் டெல்லியில் தீ விபத்து சம்பவங்கள் தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு 201 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க், நெருக்கடி நிறைந்த பகுதிகளில் தீ விபத்துச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்ததாகவும் அதனால் பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

