திருவனந்தபுரம்: கேரள நிதியமைச்சர் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளார் என்றும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வலியுறுத்தி உள்ளார்.
எனினும், இந்த கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆளும் தரப்புக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள நிதியமைச்சர் பாலகோபால், ஆளுநர் ஆரிப் முகம்மது கானை மறைமுகமாக விமர்சித்தார்.
"உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கேரளாவின் அருமை தெரியாது," என்று அமைச்சர் தமது பேச்சில் குறிப்பிட்டார்.
இதனால் கோபமடைந்துள்ள ஆளுநர், தம்மை மட்டுமல்லாமல் நாட்டையும் அவமதிக்கும் வகையில் அமைச்சர் பாலகோபால் பேசி வருவதாகவும் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே பல்கலைக்கழகத் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

