ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் தனது, 76-வது காலாட்படை தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் மக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பதிலடியை அந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவைக் குறிவைத்துத் தாக்குவதே தீவிரவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.
அரசியலைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் பேசினார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி, இந்திய ராணுவம் சார்பில் காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1947ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய ராணுவத்தின் முதல் சீக்கியர் படைப்பிரிவு, ஸ்ரீநகரில் உள்ள விமானத் தளத்தில் தரையிறங்கி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பாகிஸ்தான் படையினரை விரட்டியது. சுதந்திர இந்தியாவில் ராணுவம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு
இந்நிலையில், ஜம்மு ரயில் நிலையம் அருகே 18 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை மாலை ரயில் நிலையம் அருகே பையில் அடைக்கப்பட்ட 18 டெட்டனேட்டர் கருவிகளும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. அதனால், அங்கு பெரிய அளவில் நடக்கவிருந்த குண்டுவெடிப்பு சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தின் அருகே உள்ள வாய்க்கால் ஒன்றில் பை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, ரயில் நிலையம், நடைமேடைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை, மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலைய சுற்றுவட்டாரத்தில் சுற்றுக்காவல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

