ஐஸவால்: பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் நான்கு பேர் உடல் கருகி மாண்டனர்.
மிசோரம் மாநிலத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
அங்காவர்மா மாவட்டத்தில் உள்ள துங்கிலா கிராமத்தில் சனிக்கிழமை அன்று பெட்ரோல் ஏற்றப்பட்ட லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் டேங்கரில் இருந்து திடீரென பெட்ரோல் கசிந்து ஒழுகியது. இதைப் பார்த்ததும் ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். ஆனால் லாரி டேங்கரில் இருந்து பெட்ரோல் வெளியேறுவதைப் பார்த்த கிராம மக்கள் ஓடி வந்து பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றியது. இதில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்ற இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்த னர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை, தீயணைப்புப் படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டனர்.
மேலும் 18 பேர் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவர் களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

