புதுடெல்லி: சீன கடன் செயலி மூலம் கடன் வாங்கியவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருவதை அடுத்து அனைத்து மாநிலங்களும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசு களுக்கு அனுப்பி உள்ள கடிதம் ஒன்றில், சட்ட விரோத கடன் செயலிகளால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுமக்களின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் செயலிகள் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே, இந்தச் செயலிகள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
"இது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்கு தேசிய இணைய குற்றத் தடயவியல் ஆய்வுக் கூடத்தின் சேவையைப் பெறலாம். இதுபோன்ற செயலிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்," என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சீன கடன் செயலி மூலம் கடன் பெறுவோரிடம் மிக அதிகமான வட்டி வசூலிக்கப்படுவதாகவும் கடன் தொகை, வட்டியைச் செலுத்த தவறினால், கடன் வாங்கியவர்கள் மிரட்டப்படுவதாகவும் பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

