வயது ஒரு தடையல்ல: 11 வகை வாகனங்களை ஓட்டி அசத்தும் 72 வயது மாது

வயது ஒரு தடையல்ல: 11 வகை வாகனங்களை ஓட்டி அசத்தும் 72 வயது மாது

2 mins read
6586fa0c-7a25-43e2-8cdf-83f7b9d16f97
பதினொரு வகை வாகனங்களை ஓட்டி அசத்தும் ராதாமணி அம்மா. படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த ராதாமணி அம்மா, 72, புதிய விஷயங்களைச் செய்து காட்டுவதில் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வருகிறார்.

பதினொரு வகை வாகனங்களை ஓட்ட இவர் உரிமம் பெற்றுள்ளார். 1981ல் முதன்முறையாக கார் ஓட்டக் கற்றுக்கொண்டார் இவர். பல்வேறு வாகனங்களை ஓட்ட இவரது கற்றல் பயணத்தின் தொடக்கமாக அது அமைந்தது.

பின்னர் லாரி, பேருந்து, ஜேசிபி பாரந்தூக்கி, 'டிரெய்லர்' வாகனம், பளுதூக்கி (forklift), 'ரோடு ரோல்லர்', இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களை ஓட்ட ராதாமணி உரிமம் பெற்றார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, பெட்ரோலிய பொருள்களை ஏந்திச்செல்லும் வாகனங்களை ஓட்டவும் இவர் உரிமம் பெற்றார்.

வாகனம் ஓட்ட ராதாமணியின் கற்றல் பயணம் 1981ல் தொடங்கியது. அப்போது இவருடைய கணவர் லலன், வாகனம் ஓட்ட ஊக்குவித்தார். 1970களில், வாகனம் ஓட்ட சொல்லித்தரும் பள்ளியை லலன் நடத்தி வந்தார். 2004ல் அவரது மரணத்திற்குப் பிறகு, ராதாமணியும் இவருடைய பிள்ளைகளும் அப்பள்ளியை நடத்தி வருகின்றனர்.

கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் வழங்கும் பயிற்சிக் கழகத்தை கேரளாவில் தொடங்கிய முதல் நபர் தாம்தான் என்கிறார் ராதாமணி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ராதாமணியை கார் ஓட்டியதைக் கண்டு அக்கம்பக்கத்தில் உள்ள பலரும் ஆச்சரியப்பட்டனர். பலரும் தம்மைக் கிண்டல் செய்ததாகவும் ராதாமணி நினைவுகூர்ந்தார்.

ஆனால் இன்றோ, இவரது கதையை அறிந்த பலரும் இவரை நேரில் சந்திக்க வருகின்றனர். இவரது வாழ்க்கை அவர்களுக்குப் பெரும் உத்வேகத்தைத் தருகிறது.

ஜேசிபி பாரந்தூக்கியை ஓட்டுவதே மிகவும் கடினமானது என்கிறார் ராதாமணி.

"வாகனம் ஓட்டும் துறையில் மகளிருக்கு வேலைவாய்ப்புகள் பலவும் உள்ளன. ஆர்வத்தின் அடிப்படையில் ஓட்டுநர் பயிற்சியை மேற்கொள்ள எங்களிடம் வந்த மகளிர் பலரும் இன்று அவர்களது உரிமத்தைப் பெற்றுக்கொள்வது மனநிறைவு தருகிறது," என்கிறார் ராதாமணி.

ஓட்டுநர் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இவர், 'ஆட்டோமொபைஸ்' பொறியியல் துறையில் பட்டயக்கல்வியை மேற்கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.