அகமதாபாத்: குஜராத்தின் மோதேரா கிராமம் இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அக்கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் 24 மணிநேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய சக்தி பயன்பாடு காரணமாக, இக்கிராம மக்களின் மின்சாரப் பயன்பாடு 60 முதல் நூறு விழுக்காடு வரை குறைந்துள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தில் உலகின் மூன்றாவது நாடாக உள்ள இந்தியா, தனது எரிசக்தி தேவையில் சரிபாதியை புதுப்பிக்கத்தக்க ஆற்றல்மூலங்களான சூரிய சக்தி, காற்றாலைகள் மூலம் ஈடுகட்ட திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்கள் இந்த இலக்கை அடைய திட்டமிட்டுள்ள இந்திய அரசு, மோதேரா கிராமத்தில் சூரிய சக்தி உற்பத்தி திட்டத்துக்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது.
சுமார் 6,500 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில், 1,300க்கும் மேற்பட்ட சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள், தையல் கலைஞர்கள், குயவர்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் தங்களுக்கான மின்கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் தங்கள் துறை சார்ந்த உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

